அழகுக்கு - கரிசலாங்கண்ணி
ஹென்னா (மருதாணி) கண்டிஷனர் தயாரிக்கும் போது கண்டிப்பாக கரிசலாங்கண்ணி இலை சேர்த்து அரைக்கவும். கரிசல், பிருங்கிராஜ், கரப்பான், கைகேசி என்று பல பெயர்களில் அழைக்கப்படும் காரிசிலாங்கண்ணி இலைகளை நன்கு அரைத்து உடல் முழுதும் பூசி ஊறவைத்த பின் குளித்தால், அற்புதமான ஹெர்பல் பேக் பலன் கிடைக்கும்!
கரிசலாங்கண்ணி சாறு, அருகம்புல் சாறு, தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய் இவை தலா 200 மி.லிட்டர் எடுத்து சுண்டக்காய்ச்சி தைலம் தயாரித்து தினமும் தலையில் தடவி மசாஜ் செய்தால் பொடுகு இருக்காது; தலைமுடி உதிராது.
கரிசலாங்கண்ணி சாறு, பெரிய நெல்லிக்காயின் சாறு, நல்லெண்ணெய் இவை தலா 400 மி.லி எடுத்து அதிமதுரம் அரைத்த விழுது 100 கிராம் சேர்த்து தைலம் காய்ச்சவும். வாரம் ஒருமுறை இந்த எண்ணெயைத் தடவி, ஷாம்புவோ, சீயக்காயோ தேய்த்துக் குளித்தால், கருங்கூந்தலின் பள பளப்புக்கு கரிசலாங்கண்ணி கியாரண்டி!
கரிசலாங்கண்ணி தைலம்
கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாறு - 3 கப், கீழா நெல்லி இலை சாறு - 1 கப், பொன்னாங்கண்ணி இலை சாறு - 1 கப், எலுமிச்சை சாறு - 1 கப்... இவற்றை 6 கப் நல்லெண் ணெயுடன் கலந்து அரை மணி நேரம் அடுப்பில் வையுங்கள். ‘சடசட’வென்ற ஓசை அடங்கி, தைல பதத்தில் வந்ததும், காய வைத்த நெல்லிக்காய் பவுடர் - 10 கிராமை இதில் போடுங்கள். பிறகு, அடுப்பை அணைத்து விடுங்கள். இந்தத் தைலத்தை தினமும் தலையில் தேய்த்து வர, முடி ‘கருகரு’வென்று வளரத் தொடங்கும்.
பச்சை கரிசலாங்கண்ணி இலை இடித்த சாறு - 2 கப், அருகம்புல் சாறு - 2 கப், தேங்காய் எண்ணெய் - 2 கப்... இவற்றுடன் 1 கப் தேங்காய்ப் பால் கலந்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு பண்ணுங்கள். நீர்ப் பதம் போய் தைல பதத்தில் வந்ததும் இறக்கி விடுங்கள். தினமும் தலைக்கு எண்ணெய்க்கு பதிலாக இந்தத் தைலத்தைத் தேய்த்து வாருங்கள். இது பொடுகையும் பேனையும் ஓட ஓட விரட்டியடிப்பதால், தலை சூப்பர் சுத்தமாகிவிடும்.
‘என்னென்னவோ எண்ணெய் தேய்த்துப் பார்த்து விட்டேன். இந்த முடி கொட்டுவது மட்டும் நிற்க மாட்டேன் என்கிறதே’ என்று கவலைப் படுகிறவர்களை சந்தோஷப்படுத்து கிறது,
இரும்பு வாணலியை அடுப்பில் வையுங்கள். அது நன்றாகக் காய்ந்ததும் 1 கப் கரிசலாங்கண்ணி சாறை அதில் ஊற்றுங்கள். ஈரப்பதம் போய் ஓசை அடங்கியதும் அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது இதனுடன் 2 கப் தேங்காய் எண்ணெய், 10 கிராம் சுருள் பட்டை பொடி, 5 கிராம் காய்ந்த ரோஜா இதழ்களை சேருங்கள். இந்த எண்ணெயை தினமும் தடவி வர, முடி கொட்டுவது நின்று நன்றாக வளரத் தொடங்கும். பள்ளி செல்லும் குழந்தைகள் எனில், தினமும் 2 துளி எண்ணெய் தடவினாலே போதும்.
இளநரை வராமல் தடுக்கிற அற்புத சக்தி கரிசலாங் கண்ணியில் இருக்கிறது. கரிசலாங்கண்ணி இலை, கறிவேப்பிலை இரண்டையும் தனித்தனியே உலர்த்தி பொடி பண்ணிக் கொள்ளுங்கள். இது இரண்டிலிருந்தும் தலா 2 டீஸ்பூன் எடுத்து, அதனுடன் எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன், தயிர் - 1 டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இதைத் தலைக்கு ‘பேக்’ ஆகப் போட்டு, 10 நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் 2 முறை இந்த ‘பேக்’ போட்டு குளித்து வந்தால், இளநரை பக்கத்திலேயே வராது.
சிலருக்கு தலையில் ஆங்காங்கே வழுக்கை விழுந்து தோற்றம் பொலிவிழந்திருக்கும். வழுக்கையைப் போக்கி, கேசத்தை செழிப்பாக வளரச் செய்கிற மகத்துவம் கரிசலாங்கண்ணியின் தனித்துவம்! செம்பருத்தி பூ - 1 கப், கரிசலாங்கண்ணி இலை - 1 கப்... இரண்டையும் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வதக்குங்கள். இதை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கி வடிகட்டுங்கள். இதனுடன் 3 கப் தேங்காய் எண்ணெய் கலந்து தண்ணீர்ப் பதம் போகும்வரை... அதாவது சுமார் 10 நாட்கள்... வெயிலில் வைத்து எடுங்கள். இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வாருங்கள். செம்பருத்தி, வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கும். கரிசலாங்கண்ணி, வழுக்கை விழுந்த இடத்தில் முடியை வளரச் செய்யும்.
ஆரோக்கியத்துக்கு - கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி தால்
தேவையான பொருள்கள் :
- கரிசலாங்கண்ணி இலை - 50 கிராம்,
- துவரம் பருப்பு - 1 பிடி,
- பயத்தம் பருப்பு - 1 பிடி,
- சீரகம் - சிறிது,
- மிளகாய் வற்றல் - 1.
செய்முறை:
கரிசலாங்கண்ணி இலையை லேசாக வதக்கவும். வாணலியில் கடுகு, சீரகம், மிளகாய் தாளித்து, வெந்த பருப்புகளைப் போட்டு கரிசலாங்கண்ணியையும் சேர்த்து உப்புப் போட்டு கொதிக்க வைக்கவும். முக்கியமான விஷயம், கரிசலாங்கண்ணியில் புளி, தக்காளி, எலுமிச்சம் பழம் எதுவும் சேர்க்கக் கூடாது. சேர்த்தால் நிறம் மாறிவிடும்... சத்தும் போய்விடும்!
கரிசலாங்கண்ணியின் முக்கிய குணமே ரத்தசோகையைப் போக்குவதுதான்! சில பேர் நோய் ஏற்பட்டு இளைத்திருப்பார்கள். கரிசலாங்கண்ணி இலைகளைக் காய வைத்து பொடி செய்து தேன் கலந்து உண்டால், உடல் பழைய நிலைக்கு வந்து விடும்.
கரிசலாங்கண்ணி இலைகளுடன் குப்பைமேனி இலைகளையும் சேர்த்துக் காயவைத்து நைஸாகப் பொடி செய்யவும். சம அளவு சர்க்கரை சேர்த்து பாட்டிலில் போட்டு வைக்கவும். தினம் காலையில் 2 ஸ்பூன் சாப்பிட்டு தண்ணீர் குடிக்கவும்; ரத்த சோகை நீங்கும்; கண்கள் பிரகாசமாகும்.