உடல் நலம் - General Health

பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. எந்தக்காரணத்தால் உடல் இளைத்திருந்தாலும், அவர்கள் பேரீச்சம்பழத்தைத் தாராளமாகச் சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்துக் கொள்வதால், மெலிந்த உடல் தேறும். போகக் களைப்பு நீங்கும். தாது விருத்தியும் பலமும் உண்டாகும்.

100 எறுக்கம்பூக்களை எடுத்து நன்றாய் உலர்த்தி, சாதிக்காய், லவங்கம், சாதிப்பத்திரி வகைக்கு ஒரு தோலா சேர்த்து, பன்னீர் விட்டு அரைத்து குன்றிமணி அளவுள்ள மாத்திரைகளாக செய்து கொண்டு, ஒரு நாளைக்கு ஒருவேளை ஒரு மாத்திரையாக சாப்பிட்டுவர தாது விருத்தியாகும். உடல் பலமும் ஏற்படும்.

முருங்கை ஈர்க்குகளை நறுக்கி, மிளகு ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், கை கால் உடல் அசதிகள் நீங்கும். உடலில் பலமும் ஏறும். உடலைத் தேற்றும் நல்ல டானிக் இது.

அருகம்புல்லை வேரோடு பறித்து சுத்தம் செய்து சிறிது நீர் சேர்த்து அம்மியில் வைத்து ஒட்ட ஒட்ட அரைத்து, சம அளவு வெண்ணையையும் கலந்து காலை,மாலை சாப்பிடவும். நீண்ட நாட்கள் சாப்பிட்டு வந்தால்தான் உடலில் பலம் ஏறும்.

வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடுவது நல்லது. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். பார்வை தெளிவடையும். சொரி சிறங்கை அகற்றும். அஜீரணத்தைப் போக்கும்.

வில்வப்பழத்தின் சதைப்பாகத்தை எடுத்து அத்துடன் சீனாக் கற்கண்டையும் சேர்த்து கலந்து ஒரு கோலி உருண்டை அளவு காலை மட்டும் சாப்பிட்டுவர, உடல் வலுப்பெறும். இரண்டொரு வாரங்கள் சாப்பிடுங்கள். பலம் கூடிவிடும். அந்த நாட்களில் புளி, காரம் சேர்ப்பது கூடாது.

வேப்பம்பூ ஒரு அவுன்ஸ், நிலவேம்பு ஒரு அவுன்ஸ் இரண்டையும் நன்றாக நசுக்கி, அதில் 1 டம்ளர் கொதிக்கும் நீரை ஊற்றி வைக்கவும். 2 மணி நேரத்திற்குப்பின், வடிகட்டி வேளைக்கு 2 அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் எல்லா பலஹீனங்களும், முக்கியமாக காய்ச்சலுக்குப் பின் உண்டாகும் பலஹீனம் சரியாகிவிடும்.

அரிசித் தவுட்டுடன் பனை வெல்லத்தையும் கலந்து, சிறு உருண்டை செய்து வாயில் போட்டு சாப்பிடுங்கள். இரண்டொரு வாரங்கள் சாப்பிட்டாலே நல்ல பலம் ஏறும்.

கல்யாணிப்பூசணி சாறு 1 டம்ளர் எடுத்து, அதில் பனை வெல்லத்தைப் போட்டுக் கலக்கி, ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வந்தால், உடம்பில் ஏற்படும் தளர்ச்சி, களைப்பு, மூளைச்சோர்வு, அத்தனையும் சரியாகிவிடும்.

உடல் மெலிந்து கிடப்பவர்கள், பெருக்க வேண்டுமானால், வேப்பம்பூவை ஊற வைத்து, குடிநீர் தயாரித்து, காலையில் பருகி வந்தால், சிறுகச் சிறுக உடல் மெலிவு நீங்கி பெருக்கத் தொடங்கும்.

நீண்டநாள் வியாதியில் கஷ்டப்படுவோருக்கு, ஆரஞ்சுப்பழ ரசமும், ஆரஞ்சுத்தோல் சத்து நீரும், தக்காளிப்பழ ரசமும், மூன்றும் சமமாகக் கலந்து கொடுத்தால் அதிக சீக்கிரத்தில் இரத்தம் அபிவிருத்தி அடைகிறது. நல்ல பலத்தையும், சுறுசுறுப்பையும் தைரியத்தையும் பெறலாம்.

சிவப்பு முள்ளங்கியை, வாதுமைப் பருப்புடன் சேர்த்து நனறாக அரைத்து, நெய், தேன் சேர்த்து அல்வாவாகச் செய்து சாப்பிடலாம். தேகத்திற்கு அபரிமிதமான பலனைத் தரும்.

வெந்தயமும், வறுத்த கோதுமையும் சமமாக எடுத்து பொடி செய்து (காப்பிக்குப் பதிலாக) பாலும் சர்க்கரையும் சேர்த்துப் பருகி வர உடல் மேன்மையடையும்.

இளமைக்குரிய பொலிவு இல்லாததால் சில பெண்கள் இளமையிலேயே முதுமை தோற்றத்துடன் இருப்பர். இவர்கள் மஞ்சளை சீவி தோலை மட்டும் எடுத்து இடித்துப் பொடியாக்கி தேனில் குழைத்துச் சாப்பிட சருமம் பளபளக்க இளமைத் தோற்றம் அடைவார்கள்.

காலையில் பாக்கு அளவு தோல் சீவிய இஞ்சியை வாயில்போட்டு நன்றாக மென்று விழுங்க வேண்டும். மத்தியானம் கொஞ்சம் சுக்குத் துண்டு வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்க வேண்டும். மாலையில் கொஞ்சம் கடுக்காயத்துண்டு மென்று தின்று விட வேண்டும். 40 நாட்கள் சாப்பிட்டால் எந்த வியாதியும் வராமல் தேகம் பலப்படும்.

5 பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி காய்ச்சிய பசும்பாலில் சேர்த்துக் கலந்து, தேன் 2 ஸ்பூன், ஏலக்காய்-3, குங்குமப்பூ -5 இதழ் சேர்த்து பருகலாம். இதற்கு இணையான ஒரு டானிக் கிடையாது. சிறுவர், சிறுமியர் இளைஞர், தாய்மார்கள், நோயுற்றவர்கள், படுக்கையிலேயே கிடக்கும் நீண்டநாள் நோயாளிகள் என எல்லோருக்கும் கொடுக்கலாம். இது ஒரு சத்துள்ள நல்ல டானிக்.

வறண்டு மெலிந்த தேகம் வளர்ச்சியடைய, பொன்னாங்கண்ணிக் கீரையை உலர்த்தி பொடி செய்து, 400 கிராம் தூளுடன், 70 கிராம் கடுக்காய்த் தூள், 30 கிராம் ஏலக்காய்த்தூள், 400 கிராம் சீனாக் கற்கண்டு, இவைகளை ஒன்று சேர்த்துக் கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் மூன்று விரல் பிரமானம் எடுத்து நெய்விட்டுக் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் ஆகும். கண் ஒளி பிரகாசம் அடையும். உடல் பொன்னிறமாகும்.

7 பாதாம்பருப்பு, 2 தேக்கரண்டி கசகசா இரண்டையும் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் பாதாம்பருப்பின் தோலை எடுத்துவிட்டு மற்றவைகளை பசும்பால் விட்டு நன்றாக அரைத்து சர்க்கரை கலந்த ஒரு டம்ளர் பாலில் கலந்து காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். உடல் சோர்வு நீங்கும். ஆண்மை குறையுள்ளவர்களுக்கு விந்து பெருகும். உடல் நன்கு தேறும்.

செம்பருத்தி சர்பத் - 100 பூக்களுக்கு ஒரு படி சுத்த நீர் விட்டு, சரி பாதியாகும் வரை காய்ச்சி, ஒரு வீசை சீனாக்கற்கண்டு சேர்த்து சர்பத்தாக நன்றாகக் காய்ச்சி, காலை, மாலை அரை அவுன்ஸ் சிறுவர் முதல் பெரியோர் வரை பருகிவர, கணைச் சூடு உஷ்ணம் உடனே போகும். ஒரு மண்டலம் சாப்பிட சரீரம் பருத்துவிடும். மன உற்சாகம் தரும். சிறுவர் சிறுமியர் கவர்ச்சியான தோற்றம் பெறுவர்

செம்பருத்தி குல்கந்து – கண்ணாடிப் பாத்திரத்தில் பூவின் மெல்லிய இதழ்களைப் போட்டு, அதன் மேல் சீனாக்கற்கண்டுத் தூளை நிறையத் தூவி வெயிலில் காய வைத்து விடவேண்டும். சில தினங்கள் பக்குவமாகக் காய்ந்தபின் கொஞ்சம் குங்குமப்பூ கலந்து வேறு பாட்டிலில் பத்திரப்படுத்த வேண்டும். இதை ஒரு தோலா அளவு நாள்தோறும் சாப்பிட்டு வந்தால், நல்ல ஆரோக்கியத்தையும் இரத்த புஷ்டியையும் தரும். மனதுக்கு விவரிக்க முடியாத உற்சாகத்தைத் தரும்.

செம்பருத்திக் காபி - இரண்டு அல்லது 3 புஷ்பங்கள் ஒரு பாத்திரத்தில் போட்டு, பின் அதில் நன்றாகக் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி 5 முதல் 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு எடுத்து வடிகட்டினால் முதல் தர டிகாகசன் கிடைக்கும். இத்துடன் பாலும் சர்க்கரையும் சேர்த்துப் பருகினால் ருசியாக இருக்கும். இரத்த புஷ்டியும், அதனால் ஆரோக்கியம் உண்டாகும்.

ஒருநாள் விட்டு ஒருநாள் 1 பிடி பார்லி அரிசியை லேசாக வறுத்துப் பொடி செய்து கால் லிட்டர் கொதிநீரில் போட்டு வேகவைக்கவும். வேகும் போது 50 கிராம் அத்திப்பழம், 25 கிராம் கர்ஜூர் எனப்படும் உலர்ந்த திராட்சைப்பழம், அதிமதுரம் 25 கிராம், சுக்குப்பொடி 1 ஸ்பூன், நசுக்கிய 5 ஏலக்காய் இவைகளைப் போட்டுக் காய்ச்சி, நனறாகக் குழைந்ததும் இறக்கி ஆறவைத்து வடிகட்டி பாலும் பனங்கற்கண்டும் சிறிது கூட்டிப் பருக வேண்டும். உடலுக்கு வேண்டிய சத்தினைப் பெறலாம். சுவையாக இருப்பதால் அளவுக்கு அதிகமாக அருந்துதல் கூடாது. அளவோடு பார்லி கஞ்சி சாப்பிட வளமாக வாழலாம்.

கொத்துமல்லியின் விதை தனியா எனப்படும். 100 கிராம் தனியா, 100 கிராம் தோல் சீவிய சுக்கு, 10 கிராம் ஏலக்காய் இம்மூன்றையும் லேசாக வறுத்துப் பொடி செய்து 1 ஸ்பூன் அளவு தினசரி எடுத்து காபி டிகாக்சன் போல் தயாரித்து, பால், தேன் கலந்து பருகிவர உடலின் உஷ்ண நிலை சீராகச் செயல்படும். இரத்த அழுத்தம் சம நிலையில் இருக்கும். பசி உரிய நேரத்தில் எடுத்து உணவு செரிமானம் ஆகும். பித்தம் தணியும்.

வெண்பூசணி, வெங்காயம், உருளைக்கிழங்கு, உளுத்தம் பருப்பு, முழுக்கடலை, நெய், பால், தயிர், உலர்ந்த பழங்கள், பருப்பு வகைகள், பாதாம்பருப்பு, திராட்சை, ஆரஞ்சு ஆகியவைகள் சாப்பிட்டுவர உடல் பருமனாகும்.

எள் 100 கிராம், ஜாதிக்காய் 5 கிராம், சுத்தமான வேலம்பிசின் 5 கிராம், பாதாம் பருப்பு 5 கிராம், பேரீச்சம்பழம் 10 கிராம், திராட்சை 10 கிராம், ஏலக்காய் 2 கிராம் எல்லாவற்றையும் கல் உரலில் இட்டு இடிக்கவும். 200 கிராம் வெல்லம் சேர்த்து இடித்துக் கொண்டே வந்தால் லேகிய பதமாகிவிடும். பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு, காலை, மாலை கொட்டைப்பாக்கு அளவு சாப்பிட்டு வர உடல் பருமனாகும்.

தூதுவளைப்பூ, முருங்கைப்பூ, இரண்டையும் 10 எடுத்து, 1 டம்ளர் பாலில் போட்டுக் காய்ச்சி குடித்துவர சுக்கிலம் பெருகும். தேக வலிமை ஏற்படும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி அரைத்து 40 நாட்கள், தினமும் நெல்லிக்காயளவு சாப்பிட தேகம் வலுக்கும். உடல் காயசித்தியாகும். நோய் அணுகாது.

சீமை அத்திப்பழம் ஒன்று, 1 பிடி முழுக் கடலை, இரண்டையும் ஒரு மண் சட்டியில் ஊறவைத்து, விடிந்ததும் நன்றாகக் கொதிக்க காய்ச்சி, அந்த நீரை வடி கட்டிக்கொண்டு, சர்க்கரை பாலுடன் சேர்த்துக் காபி போல் 40-நாட்கள் குடிக்க உடல் பலம் பெறும்.

நெல்லிக்காயை கொட்டை நீக்கி வெயிலில் உலர வைக்க வேண்டும். 15 நாட்கள் கழித்து உரலில் இட்டு இடித்துத் தூள் செய்து பாட்டிலில் போட்டு வைத்து, தினசரி காலை பல் துலக்கியபின் 1 ஸ்பூன் வாயிலிட்டு மென்று விழுங்கி நீர் குடிக்கவும். 6 மாதங்கள் தொடர்ந்து செய்துவந்தால் உடலில் எதிர்ப்பு சக்தி பலப்படும். ஆஸ்துமா தொல்லை அறவே இருக்காது.

பூமி சர்க்கரைக் கிழங்கு, நிலப் பனங்கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, இம்மூன்றையும் பொடி செய்து, கற்கண்டு சேர்த்து, நெய் விட்டு, இரு வேளை சாப்பிட்டு வந்தால், உடல் குண்டாகும்.

பார்லி டானிக் - வயதானவர்களுக்கும், நாட்பட்ட நோயாளிகளுக்கும், சீராக வளர்ச்சி பெற வேண்டிய குழந்தைகளுக்கும், தாய்ப் பாலற்ற குழந்தைகளுக்கும் நல்லது. தினமும் இரவு பாலுடன் தேனைக் கலந்து அருந்தவும்.
Powered by nasrullah.in - TechnoNasr 2003-2020.
Designed & Developed by Mohamed Nasrullah.M