ஆண்களுக்கு – For Men (1)

தாது புஷ்டி

அம்மான் பச்சரிசி, தூதுவளை இவ்விரண்டு இலைகளையும் நெய்யில் வதக்கி, பூண்டு, உளுத்தம் பருப்பு, தேங்காய் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர, நீற்று உடைந்து போன தாதுவைக் கட்டி உடல் பலம் பெறச் செய்யும்.

புளியங்கொட்டையில் கொஞ்சம் எடுத்து, அதன் மேலுள்ள தோலைத் தட்டிப் போக்கி விட்டு, அதை வெயிலில் நன்றாகக் காய வைத்து, இடித்துத் தூள் செய்து, மெல்லிய துணியில் சலித்து, வடிகட்டி, ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் காலை-மாலை பசு நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாதுவிருத்தி ஏற்படும்.

தூதுவளைப்பூ, முருங்கைப்பூ இரண்டிலும் 10 எடுத்து, ஒரு குவளை பாலில் போட்டுக் காய்ச்சிக் குடித்துவர, சுக்கிலப் பெருக்கும், தேக வலிமையும் ஏற்படும்.

ஓரிதழ் தாமரையின் இலையை மட்டும், சூரிய உதயத்திற்கு முன் தின்று, பசும் பால் குடிக்க வேண்டும். இப்படி 40 நாட்கள் செய்ய, சிற்றின்ப பலவீனத்தைப் போக்கி, தம்பதிகளின் உறவைப் பலப்படுத்தும். ஆண்மையையும், சுக்கில விருத்தியையும் பலத்தையும் தருவதில் இதற்கு நிகரான பொருள் இல்லை என்றே சொல்லலாம். செடியின் இலையைப் பறித்துப் பச்சையாகவோ, அல்லது உலர்த்திப் பொடிசெய்து சமபாகம் சர்க்கரை சேர்த்தோ, உபயோகித்து வரலாம்.

நெல்லிக் காயை வற்றல் போட்டு வைத்துக் கொள்ளவும். நெல்லி வற்றல், பேரீச்சம் பழம், திராட்சைப் பழம், சீனாக் கற்கண்டு இவைகளைச் சேர்த்து நெய் விட்டு அரைத்துக் கொள்ளவும். தினமும் காலையில் சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வர, உடம்பில் உள்ள சூடு தணியும். தாது புஷ்டி உண்டாகும்.

மாம்பழத்துடன் தேன், குங்குமப்பூ, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரப் பொடி, பால் ஆகியவைகளையும் சேர்த்துச் சாப்பிட்டால், இருதயம் பலப்படும். தாதுவிருத்தி உண்டாகும்.

புளிச்சக் கீரையையும், வெங்காயத்தையும் சேர்த்து நெய் விட்டு தாளித்துச் சாப்பிட்டால், இந்திரியம் கெட்டிப்படும். தாதுவிருத்தி ஏற்படும்.

முருங்கைப்பூ, இளம் தென்னைக் குருத்திலுள்ள அரிசி ஆகிய இவைகளை சமமாக எடுத்துக் கொண்டு, பசும்பால் விட்டு அரைத்து, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி, படுக்கும் போது சாப்பிட, தாதுவிருத்தி உண்டாகும்.

தாம்பத்திய உறவில் தடுமாற்றம் வருவது இல்லற வாழ்வில் இன்னல் சேர்க்கும். இந்த இன்னலைப் போக்கும் இனிய உணவு பேரீச்சம்பழம். தினசரி வெள்ளாட்டுப் பாலில் 5 – 10 பேரீச்சம் பழங்களைக் கலந்து பனங்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சிப் பருகவும்.

வாழ்வளிக்கும் மூலிகைகளின் ஒரு பிரிவு கீரைகள். பருவத்துக்கு ஏற்ப பல கீரைகளைப் பயன்படுத்தும் வழி முறைகளை நம் முன்னோர் வகுத்துத் தந்து உள்ளனர். அதிலும் குறிப்பாக – திருமணமானவர்களுக்கு என்றே சக்தி வாய்ந்த சில கீரைகளை அன்றாடம் கலந்து உண்ணும்படி கூறியுள்ளனர். இதற்கு "கலவைக் கீரை" என்று பெயர்.

முருங்கை, தூதுவளை, பசலை, அரைக்கீரை, நறுந்தாளிக் கீரை

இந்த ஐவகைக் கீரைகளையும் கிடைக்கும் போது, ஒவ்வொன்றிலும் ஒரு பிடி எடுத்து, பருப்புடன் நெய்யில் பொறித்து, பூண்டு, சீரகம், வெங்காயம் சேர்த்து பகலுணவில் 2 பிடி சாப்பிட்டு வர, ஆண்மை சக்தி பெருகும். 5 கீரைகளில் குறைந்தது 3 கீரைகளாவது சாப்பிடுவது நல்லது. 10 யானைகளின் பலம் கொண்ட பழைய காலத்து மிருகமான “யாளியின்” வலிமையை இந்தக் கலவைக் கீரை சாப்பிடுவதன் மூலம் பெறலாம் என்கிறார் நம் அகத்தியர்.

மணமாகியவர்கள், உருளைக் கிழங்கை வாரம் 2 நாட்கள் வேக வைத்துத் தோல் நீக்கி, நெய்யில் வறுத்துச் சாப்பிட்டு வர, நரம்புகளின் அயர்வைப் போக்கி, இல்லற ஈடுபாட்டில் உற்சாகத்தைத் தரும்

முள்ளங்கி விதையைத் தூள் செய்து, சீனாக் கற்கண்டுப் பொடியுடன் கலந்து, காலை மாலைகளில் ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட, தாதுவைப் பலப்படுத்தி, தேக பலத்தைத் தரும்.

ஒரு தோலா முருங்கைப் பிசின், அலை லிட்டர் நீர் விட்டுப் புதுப் பாண்டத்தில் வைத்து இருந்து, காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிடத் தாது கெட்டிப்படும்.

கசகசா, வால் மிளகு, பாதாம் பருப்பு, கற்கண்டு சம அளவு எடுத்து இடித்து, தேன் போதுமான அளவு சேர்த்து லேகிய பதமாக கிளறி வைத்துக் கொண்டு, சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு பால் குடித்து வந்தால், வீரிய விருத்தியும், உடலுறவில் பலமும் ஏற்படும்.

கற்கண்டுத் தூள் 50 கிராம், பொரித்து எடுத்த படிகாரத் தூள் 15 கிராம், இரண்டையும் உறவுபடக் கலந்து வைத்துக் கொண்டு, 10 நாளைக்குப் பங்கு செய்து கொண்டு, காய்ச்சி, பசும் பாலுடன் சாப்பிட்டு வந்தால், நீற்றுப் போன தாது கட்டும்.

சில இளைஞர்களுக்கு உற்ற வயதில் கனவில் இந்திரியம் வெளிப்பட்டு வீணாவது உண்டு. இதற்கு, கொஞ்சம் துளசி விதையை எடுத்துச் சுத்தம் செய்து, அதைத் தண்ணீரில் முன் இரவிலேயே ஊற வைத்து விடவும். காலையில் அதை எடுத்து, அம்மியில் வைத்து அரைத்து, அரை ஆழாக்குப் பாலில் கலந்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவேண்டும். ஒரு வாரம் சாப்பிட்டால் போதும். கனவில் வெளியாவது நின்றுவிடும்.

கரிசலாங்கண்ணிக் கீரையைப் பற்றி வடலூர் இராமலிங்க அடிகளார் நிறையப் பேசி உள்ளார். கூடுமானவரை பச்சையாகவே சாப்பிடலாம். அதிக காரம், புளி சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடலாம். பருப்புடன் சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. இது தாதுக்களைத் திடப்படுத்தும், ஈரல் நோயே வராது. வெள்ளை, வெட்டை நோய்கள் விலகும். பற்கள், தலைமுடி, கண்கள், தோல் ஆகியவை தேய்வு அடையாமல் வலிமை பெறும்.

முருங்கை விதை, முருங்கைப் பிசின், வெங்காய விதை, நீர்முள்ளி விதை, நாயுருவி விதை இவைகளில் வகைக்கு 40 கிராம் எடுத்து, பசும்பால் விட்டு அரைத்துச் சுண்டைக்காய்ப் பிரமான மாத்திரை செய்து, காலை-மாலை 2 வேளையும், ஒரு மாத்திரை சாப்பிட்டு, பசும்பால் பருகி வந்தால், தாது கட்டும். வீரிய விருத்தி ஏற்பட்டு, போக சக்தி அதிகரிக்கும்.

தாதுவை விருத்தி செய்ய வேண்டியிருந்தாலும் சரி, இரத்தத்தை சுத்தப்படுத்த வேண்டி இருந்தாலும் சரி, முருங்கைக் கீரையை அவ்வப்பொழுது சமைத்துச் சாப்பிட்டு வாருங்கள். முருங்கைப் பூவையும், அத்துடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது.

தாதுவிருத்திக்கு அதிமதுரம் மிகவும் நல்லது. ஆண்மை குறைந்த இளைஞர்கள் அதிமதுரத்தை அரைத்து பாலில் கலந்து, அதில் தேனையும் விட்டு, சாப்பிட்டு வர வேண்டும். இது சக்தியூட்டும் அருமருந்து. தாது பலம் பெறும்.

தாது புஷ்டிக்கு கனிந்த வாழைப் பழங்களை அதிகமாகச் சாப்பிட்டு வாருங்கள். போக சக்திக்குத் தேவையான ஊட்டம் வாழைப் பழத்திலேயே இருக்கிறது.

புளிச்ச கீரையையும், வெங்காயத்தையும் சேர்த்துச் சமைத்து நெய்விட்டுத் தாளித்து சாப்பிட்டு வந்தால், இந்திரியம் கெட்டிப்படும். விந்து உற்பத்திக்கான இரும்புச் சத்து இதில் அதிகமாக இருக்கிறது.

பேரீச்சம் பழத்தைத் தேனில் ஊற வைத்து இரவில் தினமும் இரண்டு சாப்பிட்டு வர, விந்து பெருகும்.

நல்ல பேரீச்சம்பழத்துடன் சீனாக் கற்கண்டை சமமாகச் சேர்த்து, தேனில் நைய அரைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர, தாது வலிமை உண்டாகும்.

தினமும் இரவு வாதுமைப் பருப்பு ஒன்றைச் சாப்பிட்டு, ஒரு தேக்கரண்டி தேன் கலந்த பாலை உடன் அருந்தி வர, தாதுக்கட்டு உண்டாகும்.
Powered by nasrullah.in - TechnoNasr 2003-2020.
Designed & Developed by Mohamed Nasrullah.M